கனமழையினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில், ரிப்பன் கட்டிட வளாகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் மற்றும் மீட்பு உபகரணங்கள் வாகனங்களை மேயர் பிரியா கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிட சென்னை மாநகராட்சி சார்பில் மீட்பு உபகரணங்கள் மற்றும் போர்வை குடிநீர் ரொட்டி பால் பவுடர் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது.

அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, கனமழையால் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பொருட்கள் சென்னை மாநகராட்சியில் இருந்து 100 மோட்டார் பம்புகள் தென் மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்ற வகையில், முதற்கட்டமாக 100 ஹெச்பி திறன் கொண்ட 12 டீசல் பம்புகள், 50 ஹெச்பி கீழ் திறன் கொண்ட 29 டீசல் மோட்டார் பம்புகள், 30 மின் மோட்டார் பம்புகள் என 71 மோட்டார் பம்புகள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும், மேலும் 29 மோட்டார் பம்புகள் அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ரொட்டி பிஸ்கட் மற்றும் குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களும் வாகனம் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மேலும் நிவாரண பொருட்களை அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கடலோர காவல்படையில் ஹெலிகாப்டர் மூலமாகவும் ஏற்கனவே தென்மாவட்டம் மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பியுள்ளதாகவும் சென்னை மாநகராட்சியின் சார்பில் இயந்திரப் பொறியாளர் துறையில் நான்கு செயல் பொறியாளர்கள் தலைமையிலான பதினாறு பேர் கொண்ட நாடு குழுவினரும் மின் துறையின் சார்பில் செயற்பொறியாளர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட ஒரு குழுவும் மொத்தம் 23 அலுவலர்கள் நிவாரண பணிகளுக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேவைப்பட்டால் இன்னும் அதிக அளவில் பணியாளர்களை அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.