கேரள மாநிலத்தில், தனது 7 வயது மகனுக்கு கை, கால்களில் சூடு வைத்து, கண்களில் மிளகாய் பொடி (chilli powder) தேய்த்து கொடுமைப்படுத்திய கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரம், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே அட்டப்பள்ளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் தனது விளையாட்டாக பக்கத்து வீட்டிலிருந்து டயர் ஓன்றை எடுத்து வந்து தனது வீட்டின் அருகே வயலில் தீ வைத்து எரித்துள்ளான்.
இந்நிலையில், இதனை பார்த்த சிறுவனின் தாய் அந்த சிறுவனை கண்மூடித்தனமாக அடித்ததுடன் மேலும், தோசை கரண்டியை அடுப்பில் காய வைத்து சிறுவனின் கை மற்றும் கால்களில் இரக்கமில்லாமல் சூடு வைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், சிறுவனின் கண்ணில் மிளகாய் பொடியை (chilli powder) தூவி கொடுமை செய்துள்ளார். இதனால், வலி தாங்க முடியாத சிறுவன் கூச்சல் போட்டு அலறி துடித்திருக்கிறான்.
இதனை அடுத்து இச்சம்பவத்தை பார்த்த பெண் ஒருவர் பஞ்சாயத்து உறுப்பினர் உள்ளிட்டோர் மூலமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சம்பவத்தை நேரில் பார்த்த அந்த பெண்ணிடம் விசாரித்தனர்.
அப்போது, சிறுவனை பலமுறை அவரின் தாய் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதும், கண்களில் மிளகாய் பொடி தூவியதும் தெரியவந்தது.
இதனையடுத்து, காவல் துறையினர் அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் மீது குமுளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.