அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கிய நிலையில், சென்னை உயா்நீதிமன்றமும் பொதுக்குழுவை கட்சி விதிகளுக்கு உள்பட்டு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது.இருப்பினும் பெரும் பரபரப்புக்கு மத்தியில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற ஒப்புதல் வழங்கியது.
இதற்கிடையே பொதுக்குழுவை புறக்கணித்து அதிமுகவின் ஓபிஎஸ் இன்று கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை உள்ளே அழைத்துச் சென்றனர்.
அதேநேரம், தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் பிரசார வாகனத்தில் அவரது ஆதரவாளர்கள் வைத்தனர். இந்த நிலையில் அங்கிருந்த இபிஎஸ் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் கற்களை எரிந்து மோதிக் கொண்டனர்.
இதனையடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அப்போது அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த பிரச்சனையைடுத்து ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக ஓபிஎஸ் மீது அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சட்டம் – ஒழுங்கு பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஆலோசனை மேற்கொண்ட காவல் இணை ஆணையர், மற்றும் வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் , அதிமுக அலுவலகத்திற்கு தற்காலிகமாக சீல் வைத்தது.
இதனை தொடர்ந்து, தலைமை அலுவலம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் கலவரம் ஏற்பட்டு பலருக்கும் காயங்கள் ஏற்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது இல்லாமல் மேலும் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. பிறகு நீதிமன்றம் உத்தரவு படி இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் மாற்றப்பட்டது.
இதில் முக்கிய குற்றவாளியாக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிடோர் மீது 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் மற்றும் கை ரேகை நிபுணர்கள், பொதுப்பணி துறை அதிகாரிகள் கடந்த 7 தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்தனர்.
தற்போது வரை 100 நபர்கள் வரை அடையாளம் கண்டு உள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர். அடுத்த கட்டமாக கலவரத்தில் தொடர்பு உடையவர்களை நேரில் அழைத்து விசாரிக்க சம்மன் வழங்க இருப்பதாக தெரிய வருகிறது.மேலும் சிபிசிஐடி போலீசார் அடுத்த கட்டமாக கலவரம் நடைபெற்ற நாளில் பதிவான காட்சிகளை கைப்பற்றி கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.