21 நாட்கள் ஜாமீன் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்த நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
திகார் சிறைக்கு திரும்பினார்.
டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறி அமலாக்க துறை அதிகரிகாரிகள் கடந்த மார்ச் 21 ஆம் தேதி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. இதனை தொடர்ந்து ஏப்ரல் 1 ஆம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் மக்களவை தேர்தல் பரப்புரைக்காக உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. மேலும் மக்களவை தேர்தல் பரப்புரை முடிந்த பிறகு ஜுன் 2-ஆம் தேதி அவர் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில், மருத்துவ காரணங்களுக்காக தனது ஜாமினை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார் .
ஆனால் அவரது மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இதையும் படிங்க: ”21 நாட்கள் ஜாமீன் நிறைவு..”கெஜ்ரிவால் உருக்கம்.. வைரலாகும் வீடியோ!
மேலும் ஜாமீனை நீட்டிக்கக் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது ஜூன் 5ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என டெல்லி நீதிமன்றம் கூறிய நிலையில், இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கது அல்ல என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால், இன்று சிறைக்கு செல்ல அரவிந்த் கெஜ்ரிவால் தயாரானார். சிறைக்கு செல்லும் முன், வீட்டில் இருந்து மனைவி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் காந்தி நினைவிடத்திற்குச் சென்று கெஜ்ரிவால் மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஆம் ஆத்மி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், இதுபோன்ற சர்வாதிகாரத்தை நாடு பொறுத்துக் கொள்ளாது என்றும் தான் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றும் கெஜ்ரிவால் தெரிவித்து திகார் சிறையில் சரணடைந்தார்.