பெண் நீதிபதி ஒருவர் தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு தலைமை நீதிபதி சந்திரசூட்(Chandrachud) அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி ஒருவர் பணியிடத்தில் நீதிபதி ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், இதனால் தனது கருணை கொலைக்கு அனுமதி வழங்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட்க்கு கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கடிதத்தில், “மூத்த மாவட்ட நீதிபதி தன்னை மிகவும் அவமரியாதையாக நடத்தினார். அதோடு நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். நான் முற்றிலும் குப்பையாக நடத்தப்பட்டேன். என்ன நடந்தது, ஏன் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறீர்கள்? என்று யாரும் என்னிடம் கேட்கவில்லை.
இது குறித்து அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது வரை நடந்த விசாரணைகள் அனைத்தும் கேலிக்கூத்து மற்றும் ஏமாற்று வேலை. இதனால் தேவையற்ற ஒரு புழுவைப் போல உணர்கிறேன்.
எனவே கண்ணியமான முறையில் என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தயவு செய்து என்னை அனுமதிக்க வேண்டும்” என தலைமை நீதிபதி சந்திரசூட்(Chandrachud) அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.