மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை உள்ளது. அதனால் தான் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட புதிய எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனர்.
இதில் ,தற்காலிக மக்களவைத் தலைவர் பர்த்ருஹரி மஹதாப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இதனையடுத்து காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இதையும் படிங்க: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “முதன்முறையாக புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை எம்பிக்கள் பதிவியேற்பு நடக்கிறது. இந்நாளை கொண்டாடும் வாய்ப்பை நாடாளுமன்ற வளாகம் பெற்றுத் திகழ்கிறது. மக்களவை உறுப்பினர்கள் அனைவரையும் உளமாற வரவேற்கிறேன்.
எங்களுடைய நோக்கம், செயல்பாடு ஆகியவற்றுக்காகவே 3 ஆவது முறை மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். நாட்டுக்கு சேவையாற்றவும், 140 கோடி மக்களின் கனவை நனவாக்கவும் எம்பிக்கள் பாடுபட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான ஆட்சி முக்கியம்.
இந்த மக்களவையில் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர்,” மக்கள் எதிர்பார்ப்பு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் தவிர வெற்று முழக்கமில்லை என தெரிவித்தார் .
மேலும் நாடாளுமன்ற கூட்டம் சாதாரன மக்களின் எதிப்பார்ப்புகளை நிறைவு செய்யும் என்று தெரிவித்தார்.