காஷ்மீரில் திடீரென பூமி உள்வாங்கியதால் நிலப்பகுதியில் அமைந்துள்ள 31 வீடுகள் மூழ்கி சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராம்பன் பகுதியில் இருந்து 5 கி.மீ. பகுதியில் பெர்நோட் கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதி முழுவதும் மலைகளால் சூழப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென நிலப்பகுதி மூழ்க தொடங்கியுள்ளது. இதனால், அங்கு அமைக்கபட்டுள்ள சாலைகள் சேதமடைந்தன.
இந்த சம்பவத்தால் 30 முதல் 40 வீடுகள் பாதிக்கப்பட்டன. சாலைகளில் அடுத்தடுத்து விரிசல்கள் ஏற்பட்டன. இதனால், ஆயிரம் மீட்டர் முதல் 1,200 மீட்டர் வரை சாலை பாதிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து சில இடங்களில் 10 முதல் 12 மீட்டர்கள் வரை சாலைகளும் மூழ்கின.
மேலும் இந்த சம்பவம் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில், பொறியியல் அதிகாரிகளிடம் கேட்டபோது இந்த விரிசலானது தொடர்ந்து கொண்டிருந்தது மறுசீரமைப்பு பணியை மேற்கொள்ள முடியவில்லை அவர்கள் கூறினர். நிலப்பகுதி மூழ்கியதில் பயிர்களும் பாதிப்படைந்து உள்ளன என கிராமத்தினர் கூறியுள்ளனர்.