தனது மாற்றம் சேவை அமைப்பு மூலம் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கிவரும் ராகவா லாரன்ஸ் செயலுக்கு விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/lawerance-01.jpg?resize=1024%2C576&ssl=1)
தமிழ் திரைப்படத்துறையில் நடனக்கலைஞராகப் புகுந்து, நடிகர், இயக்குநர் எனபல்வேறு அவதாரங்களை எடுத்தவர் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸுக்குகாக தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
திரைப்படத்துறையில் இப்படி என்றால், சமூக சேவையிலும் சத்தமின்றி பல்வேறு நல்ல விஷயங்களை முன்னெடுத்து வருபவர் ராகவா லாரன்ஸ்.
மாற்றுத்திறனாளி நபர்களை தத்தெடுத்து அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஊட்டியவர்.
இதுதவிர பலருக்கும் கல்வி உதவி, திருமண உதவி உள்ளிட்ட பல்வேறு நல்ல விஷயங்களையும் தனது சொந்தப் பணத்தில் இருந்து செய்து வருபவர்.
சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், சேவையே கடவுள் என்பதை அடிப்படையாக வைத்து மாற்றம் என்ற பெயரில் மே 1ஆம் தேதி முதல் சேவை அறக்கட்டளையைத் தொடங்கினார்.
இந்த அறக்கட்டளையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, செஃப் வினோத், அறந்தாங்கி நிஷா ஆகியோர் இணைந்து செயல்பட உள்ளனர்.
மாற்றம் அறக்கட்டளை மூலமாக 10 டிராக்டர்கள் 10 ஊர்களுக்கு வழங்க முடுவெடுக்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/lawerance-03.jpg?resize=1024%2C629&ssl=1)
இந்த நிலையில் 4வது டிராக்டர் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற விவசாயிக்கு வழங்கப்பட்டது. இதனை நடிகர் ராகவா லாரன்ஸ் நேரில் சென்று வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்து, அவரோடு செல்பி எடுத்துக் கொண்டனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/lawerance-06.jpg?resize=1024%2C576&ssl=1)
தொடர்ந்து டிராக்டர் வழங்கியபின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்வதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனை அளித்ததாகத் தெரிவித்தார்.
இதனைப் போகும் வகையிலேயே விவசாயிகளுக்கு இலவச டிராக்டர் வழங்க முடிவு செய்து 10 டிராக்டர்கள் வழங்கப்படுவதாகவும் கூறினார்.
ஒவ்வொரு ஊரிலும் சமூக ஆர்வலரை தேர்ந்தெடுத்து அவரிடம் டிராக்டர் வழங்கப்பட்டு, அவர் மூலமாக அந்த கிராம மக்களே இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
டிராக்டர்களைத் தொடர்ந்து பெண்கள் 500 பேருக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இளையராஜா, வைரமுத்து சர்ச்சை தொடர்பான கேள்வியை தவிர்த்த ராகவா லாரன்ஸ், நடிகர் ரஜினிகாந்த் தன்னைப் பாராட்டியது குறித்து நன்றி தெரிவித்து கொண்டார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/lawerance-05.jpg?resize=1024%2C576&ssl=1)
நடிகர் விஜய் கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு, நடிகர் விஜய் எதை செய்தாலும் அதை சரியாக செய்வார்.
அவர் அரசியலுக்கு வந்தது சந்தோஷம். மக்கள் நடிகர் விஜய்யிடம் அதிகம் நம்பிக்கை வைத்துள்ளனர்.
விஜய்யும் மக்களிடம் நம்பிக்கை வைத்து கட்சியை ஆரம்பித்திருக்கிறார். நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்தவர் விஜய் கட்சியில் இணைவீர்களா என்னும் கேள்விக்கு சேவையே கடவுள் என்றபடி அங்கிருந்து புறப்பட்டார்.