ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எதிர் புகார்தாரர் மீது வழக்கு பதிவு செய்ய லஞ்சம் கேட்ட சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/Thondi-arrest.jpg?resize=1024%2C576&ssl=1)
தொண்டி அருகே உள்ள பெருமானேந்தலைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் வேல்முருகன். இவருக்கும் உறவினர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.
அந்த சம்பவம் குறித்து விசாரித்து வந்த தொண்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணன் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். அதன் பிறகு காவல் நிலைய ஜாமினில் அவரை விடுவித்துள்ளார்.
இதனால் வேல்முருகன் தனது உறவினர் மீதும் வழக்கு பதிவு வேண்டுமென சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணனிடம் கேட்க, அதற்கு அவர் 3000 ரூபாய் லஞ்சமாக கேட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதன்பின்னர் பேரம் பேசியதில், ரூ.2000 ஆயிரம் என முடிவு செய்துள்ளனர். ஆனாலும் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத வேல்முருகன், சார்பு ஆய்வாளரை சிக்க வைக்க எண்ணியுள்ளார்.
இதையும் படிங்க: எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது..!!
இதனைத் தொடர்ந்து, வேல்முருகன், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறையில் தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து, அவர்கள் கொடுத்த அறிவுறுத்தலின்படி ரசாயனப் பொடி தடவிய ரூபாய் 2000 த்தை பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் பேக்கரியில் வைத்து சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கே மப்டியில் மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் தொண்டி சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணனை கையும் களவுமாக கைது செய்தனர்.
மேலும் அவரை தொண்டி காவல் நிலையம் கூட்டி சென்று விசாரணை மேற்கொண்டனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/Thondi-arrest-01.jpg?resize=1024%2C576&ssl=1)
இந்த நிலையில் சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உறவினர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், எதிர் மனுதாரர் மீதும் வழக்கு பதிவு செய்ய லஞ்சம் கேட்டு பேரம் பேசி லஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கமும் ஆகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.