ரேஷன் கடைகளில் 6 ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு இன்று முதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது. வரும் 17-ம் தேதி முதல் பணம் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டதோடு மின்சாதனப் பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதமடைந்தன.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கான டோக்கன் வரும் 16-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே இன்று முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரசு மூலமாக ஒரு பட்டியல் அனுப்பப்பட உள்ளது. அந்த பட்டியலில் உள்ள நபர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கவும் பிறகு அவர்களுக்குப் பணம் வழங்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வருமான வரி செலுத்தக் கூடியவர்கள், அரசு பணியில் இருப்பவர்களின் பெயர் அந்த பட்டியலில் பெயர் இடம் பெறாது. பட்டியலில் பெயர் இடம் பெறாத நபர்கள் ரேஷன் கடையில் கொடுக்கப்படும் படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து அரசிடம் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களைக் கொடுத்து மேல்முறையீடு செய்து நிவாரணம் கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் 17-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூ.6,000 நிவாரணத் தொகையை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.