மாணவர்களான உங்களை நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று தான்… படியுங்கள்.. படியுங்கள்.. படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் உரையாற்றினார்.அப்போது பேசிய அவர்,” பல்வேறு நாடுகளுக்குச் சென்று, அங்கு இருக்கும் நவீன வசதிகளை நம்முடைய ஊரில், நம்முடைய பிள்ளைகளுக்காக அறிமுகப்படுத்தி செயல்படுத்தவேண்டும் என்று அமைச்சர் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்.
அதேபோல, நம்முடைய பள்ளி மாணவ, மாணவியர்களை வெளிநாடு சுற்றுலாவுக்கும் அதிகஅளவில் அழைத்துக்கொண்டு செல்கிறார். தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கிறார்.
இப்படிப்பட்ட முன்னெடுப்புகளுக்கு அவருக்குத் துணையாக நிற்பது ஆசிரியர்கள்தான். அந்த ஆசிரியர்களைப் பாராட்ட வேண்டியது அரசினுடைய கடமை! பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சிப் பெற வைத்த 1,728 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் சாதனையை ஊக்கப்படுத்த அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட இருக்கிறது.
தலைமை ஆசிரியர்களுக்கு வழங்குகிறோம் என்றால் அது அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கும் அங்கீகாரம்100 விழுக்காடு தேர்ச்சி என்று சொல்லி பாராட்டுவது மூலமாக அந்த இலக்கை அனைவரும் அடையவேண்டும் என்று ஊக்கப்படுத்துவதற்கு தான் இந்த விழா! அந்த வகையில், தேர்வு எழுதிய எல்லா மாணவர்களுக்கும், அவர்களை வழி நடத்திய ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துகளும். இதே சாதனையை அடுத்த ஆண்டு அனைத்துப் பள்ளிகளும் செய்ய வேண்டும்.
அடுத்ததாக, தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்களை பாராட்ட விரும்புகிறேன். எந்த பாடத்தில் நூறு மதிப்பெண் எடுத்தாலும் பாராட்டுக்குரியதுதான். ஆனால், நம்முடைய தாய்மொழி தமிழ். அதுவும் உயர்தனிச் செம்மொழி என்பதால், அதில் 100 மதிப்பெண் பெற்றவர்கள் சிறப்பான பாராட்டுக்குரியவர்கள்.
அடுத்து, தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் 22 ஆயிரத்து 931 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட இருக்கிறது. வகுப்பறையை குழந்தைகள் மனதிற்குப் பிடித்த இடமாக வண்ணமயமாக மாற்ற, அங்கு ஸ்மார்ட் போர்டு ஒன்றைப் பொருத்தப் போகிறோம். இங்கு இணையதள வசதியும் இருக்கும்.
முதற்கட்டமாக, 500 ஸ்மார்ட் வகுப்பறைகளை இன்றைக்கு துவக்கி வைத்திருக்கிறேன். இது எல்லாமே உங்களுக்காகத்தான். என்னுடைய ஆசையெல்லாம், உலகத்தில் எந்த ஊர் மாணவர்களுக்கும், என்னுடைய தமிழ்நாட்டு மாணவர்கள் சவால் விடுகின்ற அளவிற்கு வளர்ந்து இருக்கவேண்டும். அதுதான் என் கனவு. அதற்காகதான் இந்தத் துறையில் நிறைய திட்டங்களைக் கொண்டு வருகிறோம்.
நிதி நெருக்கடி எத்தனை இருந்தாலும், கல்வித்துறையில் நிறைய புதுப்புதுத் திட்டங்களை தொடங்குகிறோம் என்றால், உங்களுக்காகத்தான். மற்ற எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். பதிலுக்கு, மாணவர்களான உங்களை நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று தான்… படியுங்கள்.. படியுங்கள்.. படித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
எங்கும் தேங்கி நிற்காமல், முன்னோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். உங்கள் கண்முன்னால் “ஃபுல் ஸ்டாப்” தெரியக் கூடாது. ‘கமா’ தான் தெரியவேண்டும். கீப் ரன்னிங். கீப் வின்னிங். கீப் ஷைனிங்.கல்விதான் உங்களிடமிருந்து யாராலும் திருட முடியாத ஒரே சொத்து. ஆனால், அதிலும் கூட, மோசடிகள் செய்வதை “நீட்” போன்ற தேர்வுமுறைகளில் பார்க்கிறோம். அதனால்தான் அதை கடுமையாக எதிர்த்து வருகிறோம். “நீட்” போன்ற தேர்வுகள் மோசடியானவை என்று முதன்முதலில் கூறியது தமிழ்நாடுதான்.
அதை இன்றைக்கு இந்தியாவே சொல்லத் தொடங்கி இருக்கிறது. இந்த மோசடிக்கு நிச்சயம் ஒரு நாள் முடிவுகட்டுவோம். அது எங்கள் பொறுப்பு. மாணவச் செல்வங்களான நீங்கள் படிக்க சமூகமோ, பொருளாதாரமோ, அரசியல் சூழ்நிலையோ எதுவுமே தடையாக இருக்கக்கூடாது. அதுதான் என்னுடைய எண்ணம். அதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை!
கல்வி எனும் நீரோடை தடங்கல் இல்லாமல் பாய்வதற்கு உங்களுடைய இந்த அரசு முழுமையாக ஆதரவாக நிற்கும்! அதை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த கவனச் சிதறலும் இல்லாமல் படிக்கவேண்டும். “படிக்காமலும் பெரிய ஆள் ஆகலாம்” என்று யாரோ ஒன்று இரண்டு பெயரைப் பார்த்து தவறான பாதையில் செல்லாமல், கல்விதான் உண்மையான, பெருமையான அடையாளம் என்று புரிந்துக்கொள்ள வேண்டும். கல்வி இருந்தால் மற்ற எல்லாம் தானாக வரும்.
நீங்கள் எல்லோரும் உலகை வெல்லும் ஆற்றலைப் பெற்று, பகுத்தறிவோடு செயல்பட தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல, உங்களின் குடும்பத்தில் ஒருவனாக இருந்தும் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.