சென்னை செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்ட போதும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போதும் ஒன்றுமே நடக்காதது போல மூடி மறைக்கப் பார்த்த அரசாங்கங்களைப் போல் நாங்கள் இல்லை” என்று கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் குறித்து எதிர்கட்சியின் குற்றச்சாட்டுக்கு திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச் சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவதிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் திமுக அரசின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் சட்டபேரவையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பேரவையில் விவாதிக்க கோரி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் கள்ளச் சாராய மரணங்களுக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் ,கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் குறித்து எதிர்கட்சியின் குற்றச்சாட்டுக்கு திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,” கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷச்சாராய சம்பவம் வருந்தத்தக்கது.
இதையும் படிங்க: ”கள்ளக்குறிச்சி விவகாரம் அரசியல் அல்ல… ” – விஜய்க்கு தூண்டில் போட்ட ஜெயகுமார்!
தமிழ்நாடு அரசின் நிவாரண உதவிகள் அந்தக் குடும்பங்களை மீட்டெடுக்கட்டும். அதிகாரிகள் மாற்றப்பட்டு முழுமையான விசாரணையை மேற்கொள்ள ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
எதிர்காலத்தில் விஷச்சாராய சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு எச்சரித்துள்ளது. நேற்றைய உயரதிகாரிகள் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
சாவில் அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்கட்சியினர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்ட போதும்,
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போதும் ஒன்றுமே நடக்காதது போல மூடி மறைக்கப் பார்த்த அரசாங்கங்களைப் போலின்றி துணிச்சலுடன் களத்தில் நின்று ‘எதிர்காலத்தில் நடக்காது’ என்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசே மக்களுக்கான அரசு! என்று தெரிவித்து எதிர்கட்சியின் குற்றச்சாட்டுக்கு திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார்.