virudhunagar fire accident – சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பந்துவார்பட்டியல் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது.
மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கும் இந்தப் பட்டாசு ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் ஆலையில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது.இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை கலவை செய்தபோது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் மூன்று அறைகள் இடிந்து சேதமடைந்தன. அந்த அறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த பட்டாசு தொழிலாளர்கள் 4 பேர் சிக்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் ராஜ்குமார், மாரிச்சாமி, மோகன், செல்வக்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.