1லட்சம் கட்டினால் 3லட்சம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி முதலீட்டாளர்களை ஏமாற்றி விட்டு துபாய் சென்ற கோவை பெண்ணை மூதலீட்டாளர்களே மடக்கி போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/Moasadi-news-03.jpg?resize=494%2C318&ssl=1)
கோவை குருடம்பாளையம் அடுத்த பன்னிமடையை சேர்ந்த 32 வயது மதுமிதா தான் இப்படி மோசடியில் ஈடுபட்டு சிக்கிக் கொண்டிருக்கிறார்.
இவர் தன்னுடன் படித்தவர்கள் மற்றும் தனக்கு அறிமுகமானவர்களிடம் தனியாக நிறுவனம் தொடங்கி ஆன்லைன் டிரேடிங் செய்ய இருப்பதாகக் கூறியுள்ளார்.
தனது நிறுவனத்தில் ரூ.1லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.20ஆயிரம் வட்டி தருவதாகவும், ஒரு வருடத்தின் முடிவில் அசல் தொகை 1லட்சத்தை திரும்பத் தருவதாகவும் கூறியுள்ளார்.
மதுமிதாவின் கூற்றுப்படி பார்த்தால் 1லட்சம் ரூபாய் கட்டினால் 1 வருட முடிவில் வட்டி மற்றும் அசல் என சேர்ந்து 3லட்சத்துக்கும் அதிகமாக கிடைக்கும்.
இதனால் ஆசைவார்த்தைகளை நம்பி பலரும் முதலீடு செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் அளவுக்கு மதுவிதாவிடம், முதலீட்டாளர்கள் பணம் கட்டி உள்ளனர்.
முதல் இரண்டு மாதங்கள் மட்டும் வட்டிப் பணம் கொடுத்தவர், அதன்பிறகு முதலீட்டாளர்களை டீலில் விட்டுள்ளார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/Moasadi-news-01.jpg?resize=1024%2C422&ssl=1)
இதனால் பணம் கொடுத்தவர்கள் அவரிடம் கேட்டபோது தன்னை மிரட்டுவதாக அவர்கள் மீதே மதுமிதா போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் சில நாட்களுக்குப் பின்னர் மதுமிதா தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுவிட்டார்.
இதனால் அவரை முதலீட்டாளர்கள் தேடிவந்ததோடு தடாகம் போலீசிலும் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் மதுமிதா துபாயில் இருப்பதை முதலீட்டாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனிடையே துபாயிலும் இதே போல் தில்லாலங்கடி ஆட்டத்தை மதுமிதா ஆட, பாதிக்கப்பட்டவர்கள் அவருக்கு எதிராக புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்.
துபாய் போலீசில் சிக்கினால் அவ்வளவுதான் என்று நினைத்த அங்கிருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு தப்பித்து வர முயன்றிருக்கிறார்.
இந்த தகவல் கோவை முதலீட்டாளர்களுக்கு தெரியவர, மதுமிதாவை தட்டித் தூக்க திட்டமிட்டுள்ளனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/Moasadi-news-05.jpg?resize=1024%2C576&ssl=1)
அதன்படி, மதுமிதாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரிடம் தகவல் கொடுத்து அவரை கொச்சி விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவத்தன்று கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய மதுமிதாவை, நேரில் பார்த்த பாதிக்கப்பட்டவர், அவருக்கு உதவ வந்திருப்பதாகக் கூறி நம்ப வைத்திருக்கிறார்.
அதன்பின்னர், இரவில் மதுமிதாவை காரில் ஏற்றிக் கொண்டு, கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு ஏற்கனவே மதுமிதாவால் பாதிக்கப்பட்ட 20 பேர் அவரது வருகைக்காக காத்திருந்தனர்.
காவல்நிலையம் வந்ததும், மதுமிதாவை சுற்றிவளைத்து சரமாரியாக கேள்வி எழுப்பியவர்கள், போலீசாரிடம் ஒப்படைக்க சென்றனர்.
ஆனால் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் ஒப்படைக்கச் சொல்லி போலீசார் கூறியுள்ளனர்.
இதையடுத்து இரவில் கார்களிலேயே போலீஸ்வளாகத்தில் இருந்தபோது, அதிகாலையில் மதுமிதா காரில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றுள்ளார்.
அவரைப் பிரிக்க முயன்றவர்களிடம், அருகே வந்தால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார்.
ஆனாலும், முதலீட்டாளர்கள் அவரை சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/Moasadi-news-04-1.jpg?resize=873%2C570&ssl=1)
அதனை தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.
இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து மதுமிதாவிடம் விசாரணை நடத்தியதில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.
கோவையில் இருந்து தப்பி துபாய் சென்ற மதுமிதா அங்கிருந்த படியே பலரிடமும் ஆன்லைன் டிரேடிங் செய்வதாகக் கூறி லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியுள்ளார்.
இதுமட்டுமின்றி துபாயில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த போது அங்கு வரும் இளைஞர்களிடம் நட்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்.
அதன்பின்னர் அவர்களுக்கு ஆபாச படங்களை அனுப்பி வைத்து பணம் கேட்டும் மிரட்டி வந்துள்ளார்.
அதில் ஒரு இளைஞர் போலீசில் புகார் அளிக்கப் போவதாக தெரிவித்ததும், அங்கிருந்து தப்பி கொச்சிக்கு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மதுமிதா மீது மோசடி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.