10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, ஏப்ரல் 6ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 9.14 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இதனைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தோ்வு விடைத்தாள்கள் சரிபார்க்கப்பட்டு, தோ்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதிய அனைத்து மாணவா்களுக்கும் இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும்.
தனித்தோ்வா்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தோ்வெழுதிய மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.