அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை இன்று சந்தித்து, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்தும், கல்வி, சர்வதேச விவகாரங்கள், சுகாதாரம், பிராந்திய வளர்ச்சிகள், தொழில்நுட்பங்கள், உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![PM-Narendra-Modi-and-US-VicePresident-Kamala-Harris](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2021/09/modi-1024x639-1.jpg?resize=1024%2C639&ssl=1)
அதனைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வானது வரலாற்று சிறப்பு வாய்ந்தது என பாராட்டிய பிரதமர் மோடி உலகம் முழுவதும் பலருக்கு கமலா ஹாரிஸ் உந்து சக்தியாக திகழ்கிறார் என்றும் புகழாரம் சூட்டினார்.
மேலும் அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தலைமையில் இந்திய, அமெரிக்க உறவு நிச்சயம் புதிய உயரத்தை அடையும் என தாம் நம்புவதாகவும் விரைவில் இந்தியாவுக்கு வர வேண்டும் எனவும் மோடி அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ் இந்தியா அமெரிக்காவின் மிக முக்கியமான பங்குதாரர் என்றும் கொரோனா தொற்றால் இந்தியா பாதிக்கப்பட்டபோது, மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பொறுப்பை உணர்ந்து அமெரிக்கா உதவியதை பெருமையாக கருதுவதாகவும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார். மேலும் உலகம் முழுவதும் கொரோனா பரவத் தொடங்கிய போது, பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான மூல ஆதாரமாக இந்தியா விளங்கியதாக பாராட்டினார்
முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிடே சுகாவையும் பிரதமர் மோடி தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினார்.