சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடிகை சீதாவின் வீட்டில் 4 1/2 சவரன் தங்க நகை திருடு போயுள்ளது. இச்சம்பவம் குறித்து சீதா கொடுத்த புகாரின் போரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் ‘ஆண்பாவம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சீதா.
இதனிடையே நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார்.
தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் இவரது வீடு உள்ளது. இந்நிலையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “கடந்த அக்.31ம் தேதி, தனது தம்பியின் மனைவி கல்பனா, விசேஷம் ஒன்றுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் 4 1/2 பவுன் நகைகளை வீட்டில் கழற்றி வைத்துவிட்டு உறங்கிவிட்டேன். பின்னர், எழுந்து பார்த்த போது அந்த நகைகள் மாயமாகி விட்டன. என் வீட்டில் திருடு போன அந்த நகையை கண்டுபிடித்து தரவேண்டும்” என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.
அதையடுத்து இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நகை திருடியவரை தேடி வருகின்றனர். மேலும் சீதா வீட்டில் வேலை பார்த்து வரும் பணிப்பெண்ணிடமும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.