Vanathi Srinivasan : தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு 2 மாதங்கள் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..
“தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் இந்த ஆண்டு மிக அதிகமாக இருக்கிறது. மேட்டூர் அணை உள்ளிட்ட அணைகள், வீராணம் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டது.
பல அணைகள், ஏரிகள் வறண்டு விட்டன. இதனால், தமிழகத்தின் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில வாரங்களில் தமிழகம் மிகப் பெரிய குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ளும்.
இதையும் படிங்க : உங்கள் பேச்சு பிரதமர் பதவிக்கு அழகல்ல.. பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!
தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் வெப்பநிலை 111 பாரன்ஹீட்டை தாண்டும் என்றும், கடும் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடை வெப்பத்தில் இருந்து மக்களைக் காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் இதுபற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் வழக்கம்போல முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டு ஒதுங்கி விட்டார்.
பெருமழை வெள்ளத்தைப் போலவே, கடும் கோடை வெப்பமும் மிகப்பெரிய இயற்கை பேரிடர் தான். மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், வீட்டிற்குள் இருக்க முடியாமலும் தவியாய் தவிக்கின்றனர்.
தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எனவே, ஆவின் நிறுவனம் மூலம் கோடை வெப்பத்தின் தாக்கம் குறையும் வரை, ஒரு ரூபாய்க்கு மோர் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும். பெரும்பாலான அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு இருப்பதால், மழை நீரை சேகரிக்கும் வகையில் அதனை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.
குடிநீர் பஞ்சம் ஏற்படும் பகுதிகளை அடையாளம் கண்டு அங்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வேறு வழியே இல்லாத பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
கோடை காலத்தில் மக்கள் ஏ.சி., மின்விசிறிகளை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதனால் வழக்கத்தை விட மூன்று நான்கு மடங்கு அதிகமாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.
![Vanathi Srinivasan](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/image-39.png?resize=1024%2C576&ssl=1)
எனவே. குறைந்தபட்ச மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், மாதந்தோறும் மின் பயன்பாட்டை கணக்கிட்டு மின் கட்டணம் வசூலிப்போம் என்று திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் அதை செயல்படுத்தவில்லை.
இந்த கோடைகாலத்திற்கு மட்டுமாவது, ஒரு மாதத்திற்கு மின் பயன்பாட்டை கணக்கிட்டு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும். இதன் மூலம் மின் கட்டண சுமையிலிருந்து மக்கள் ஓரளவுக்கு தப்பிக்க முடியும்.
தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்று, கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க இது போன்ற நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார் Vanathi Srinivasan.
இதையும் படிங்க : உங்கள் பேச்சு பிரதமர் பதவிக்கு அழகல்ல.. பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!