தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் பார்த்திபன்.
புதிய பாதை, பாரதி கண்ணம்மா, அம்புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பார்த்திபன் இவன், பச்சைக் குதிரை, வித்தகன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார்.
சமீபத்தில் இவர் மட்டுமே இயக்கி, தயாரித்து, நடித்த “ஒத்த செருப்பு சைஸ் 7” திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஒரே ஒரு ஆள் மட்டுமே நடித்த இந்திய திரைப்படம் என்ற பெருமையை இந்த திரைப்படம் பெற்றுள்ளது.
ஆஸ்கர் விருதுக்கு சென்று வந்த இந்தப் படம், சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது. தற்போது பார்த்திபன் இந்தியில் ரீமேக் செய்துள்ள இப்படத்தில் அபிஷேக் பச்சன் நாயகனாக நடித்துள்ளார்.
மேலும் இரவின் நிழல் என்கிற படத்தையும் இயக்கி வரும் பார்த்திபன் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். இந்நிலையில், தனது பேஸ்புக் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு உள்ளதாக தனது டுவிட்டர் பதிவில் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
![radhakrishnan-parthiban-facebook-hacked](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2021/11/17-1487321472-parthiban3445-600.jpg?resize=600%2C450&ssl=1)
அந்த பதிவில் என் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. அறிவுள்ளவன் படமெடுக்கலாம். அறிவு மிகுந்தவர் ரசிகராகலாம். ஆனால், அறிவுக்கே பிறந்த சில இனிய எதிரிகள் ஹேக் செய்கிறார்கள். அதை எதிர்கொண்டு, அந்த அரக்கர்களை வதம்கொள்ள சற்றே நேரம் தேவை. அதுவரை அவ்விளம்பரங்களுக்காக என்னை மன்னியுங்கள்’ என்று கூறியுள்ளார்.