கடன் வாங்கி படிக்க சென்ற எங்களை பாதிக்கப்படும் போது பத்திரமாக மீட்டது போல், படிப்பை தொடரவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உக்ரைனில் போர் நடைபெற்று வருவதால் இந்திய அரசு, சிறப்பு விமானங்கள் மூலம் அங்கிருந்து இந்தியர்களை டெல்லி, மும்பை நகரங்களுக்கு அழைத்து வந்தது. சென்னை, திருச்சி பகுதிகளை சேர்ந்த 4 மாணவ- மாணவிகள் டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்களை தமிழக அரசின் அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
போர் நடக்கும் பகுதியான கார்கிவ் நகரில் இருந்து மாணவர்கள் வந்திருந்த மாணவர்களை கண்டதும் குடும்பத்தினர் கட்டிப்பிடித்து கண்ணீர் மல்க வரவேற்றனர். பின்னர் சொந்த ஊருக்கு அரசு செலவில் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த மாணவி உஷாவின் தந்தை ஐசக் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மகள் மருத்துவருக்கு படிக்க வேண்டும் என்ற கனவுடன் கடன் வாங்கி நகைகளை அடகு வைத்து அனுப்பினேன். 6ஆம் ஆண்டு படிக்கிறார். இன்னும் 2 மாதத்தில் படிப்பை முடிக்க வேண்டும். டாக்டராக வந்ததும் கடன்களை அடைக்கலாம் என்ற நினைத்தேன்.
உக்ரைன் போரால் உடமைகளை எடுக்க முடியாமல் உடுத்திய துணியுடன் வந்து உள்ளார். வாழ்க்கை, எதிர்காலத்திற்கு என்ன செய்ய முடியும் என தெரிய வில்லை. எங்கள் வீட்டு பிள்ளைகளை அழைத்து வந்த முதலமைச்சர். உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களின் படிப்பை தொடர வாழ்க்கையை அமைத்து தர உதவிட வேண்டும் என்றார்.
உக்ரைனில் இருந்து வந்த மாணவர் முகமது மன்சூர் கூறுகையில், உக்ரைனிற்கு கடந்த 4 மாதத்திற்கு முன்னர் சென்றேன். நீட் தேர்வுக்கு லட்சணக்கான பேர் எழுதினாலும் குறைந்த அளவில் வெற்றி கிடைக்கிறது. போர் தொடங்கியதால் பல்கலைக்கழகத்தில் சான்றுகள் சிக்கிவிட்டன. இதனால் என் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதே கேள்விக்குறி. உக்ரைனிற்கு திரும்பி சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எனவே, தமிழகத்தில் படிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.