நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் என்று நினைத்து பொதுமக்கள் 13 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நாகாலாந்தில் உயிரிழந்தவர்களுக்கான இறுதிச் சடங்கு கிராம மக்கள், அதிகாரிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இதில், நாகாலாந்து முதல்வர் நெய்ப்யூ ரியோ கலந்து கொண்டு உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், நாகாலாந்து முதல்வர் நெய்ப்யூ ரியோ கூறியதாவது:-
நாகாலாந்து படுகொலை விவகாரம் தொடர்பாக நான் மத்திய உள்துறை அமைச்சரிடம் பேசினேன். அவர் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளார். மத்திய அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.11 லட்சமும், மாநில அரசு தலா ரூ.5 லட்சமும் நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளது.
நாகாலாந்தில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அகற்றுமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். இந்த சட்டம் நம் நாட்டின் பிம்பத்தையே கெடுத்துவிட்டது அவர் கூறினார்.
இதற்கிடையில் பொதுமக்கள் தாக்கியதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். அசாம் ரைபிள் முகாமில் பொதுமக்கள் வன்முறையில் சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது வீரர்கள் சுட்டதில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.