இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் உலக வல்லாதிக்க நாடுகள், உலகப் பெரும்தலைவர்கள், பன்னாட்டு அமைப்புகள் பாலஸ்தீனத்தின் மீது பல ஆண்டுகளாகத் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலைக் கண்டிக்காது அமைதி காத்தது ஏன்? என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
இஸ்ரேல் – பாலஸ்தீன போர்:
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இந்த பகுதியை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக தெரிவித்துள்ளது.இதனால் ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் தாக்குதல்களை தொடுத்திருக்கிறது.

இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்..
ஸ்ரேல் மீது பாலஸ்தீன விடுதலை அமைப்பான ‘ஹமாஸ்’ நடத்திய தாக்குதல்களும், அதனைத்தொடர்ந்து பாலஸ்தீனத்தின் காசா சிறுநிலத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களாலும் இருதரப்பிலும் இதுவரை 1000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ள செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
போரினால் மக்கள் பேரிழப்பைச் சந்திக்க நேரிடும் என்பதையும், போர் மட்டுமே நிரந்தரத் தீர்வில்லை என்பதையும் உலகில் வேறு எந்த மக்களையும் விட 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தாயக விடுதலைப்போரில் இலட்சக்கணக்கான இன உறவுகளை இழந்து நிற்கும் தமிழின மக்களாகிய நாங்கள் நன்கு அறிவோம்.

ஆனால், அடிமையாய் வாழ்வதை விடவும் போராடிச் சாவது மேலானது என்பதுதான் வரலாறு காட்டும் விடுதலைக்கான பெரும் தத்துவம். அன்றைக்கு ஆயுதம் தாங்கிய ஈழ மக்கள் இராணுவமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை பயங்கரவாத இயக்கம் என்று உலக நாடுகள் முத்திரை குத்தி ஈழ விடுதலைப்போராட்டத்தை எப்படி நசுக்கியதோ, அதைப்போலவே தற்போது ஹமாஸையும் வெறும் பயங்கரவாத இயக்கமாக மட்டுமே உலக நாடுகள் சித்தரித்து வருகின்றனவே அன்றி அதன் போராட்டத்தின் நியாயத்தை எவரும் உணரவில்லை.

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகள் எவ்வளவு? அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட 1993க்கு பிறகு கடந்த 30 ஆண்டுகளில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அகதிகளாக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? இஸ்ரேல் ராணுவம் அழித்தொழித்த பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் எத்தனை? 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு 50,000 குழந்தைகள் உட்பட 1,50,000க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் இஸ்ரேல் அரசால் கொல்லப்பட்டுள்ளனர். அவற்றையெல்லாம் பற்றி ஏன் உலக நாடுகள் வாய்திறக்கவில்லை? இதோ இந்த நொடியில் கூடத் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் கொத்து குண்டுகளைப் போட்டு அப்பாவி பாலஸ்தீன மக்களை அழித்தொழிக்கும் இஸ்ரேலை உலக நாடுகள் இதுவரை தடுத்து நிறுத்தாதது ஏன்?

“என் ஒரு கையில் துப்பாக்கி இருக்கிறது, மறு கையில் அமைதியைக் குறிக்கும் ஆலிவ் இலை இருக்கிறது; எதைத் தூக்க வேண்டுமென்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று ஐ.நா. மன்றில் தோன்றி உலகத்தின் முன் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பேருரையை ஆற்றிய பாலஸ்தீன தந்தை விடுதலைப் போராளி, புரட்சியாளர் யாசர் அராபத்திற்கு உலக நாடுகள் முன்னிலையில் அளித்த உறுதிமொழியைக் காலில் போட்டு மிதித்து, பாலஸ்தீன விடுதலைக் கனவை நசுக்கிய இஸ்ரேல் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.