அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி(sp velumani) தனது ட்விட்டர் பக்கத்தில் ‘என்றென்றும் அதிமுககாரன்..’ கேப்ஷனுடன்பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செப்டம்பர் 26அம தேதி செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாஜக உடன் இனி எந்த கூட்டணியும் இல்லை என்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஒருமனதாக முடிவெடுத்தனர். இது தொடர்பான தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்மொழிந்தார்.
இதையடுத்து பாஜக உடனும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் அதிமுக விலகுவதாக அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் கூட்டணி முறிவு தீர்மானத்தை எஸ்.பி.வேலுமணி தான் வாசித்தார் என்றும் அப்போது கட்சித் தலைமையின் முடிவுகளுக்குக் கட்டுப்படுவதாக அவர் கூறியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. பின்னர் கூட்டணி முறிவு குறித்து ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் அதிமுக- பாஜக இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்த முயற்சித்ததாகவும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன.
அதேபோல அதிமுக -பாஜக கள நிலவரம் தொடர்பாக மூத்த மத்திய அமைச்சர் ஒருவரிடம் டெல்லி பாஜக மேலிடம் அறிக்கை கேட்டிருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி(sp velumani) தனது எக்ஸ் தளத்தில் என்றென்றும் அதிமுககாரன்.. என்று பதிவிட்டு உட்கட்சிப் பூசல் சலசலப்புகளுக்கு வேலுமணி வழிவகுக்கலாம் என்ற வாதவிவாதங்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.
(அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.பழனிசாமி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எஸ்.பி.வேலுமணி இவ்வாறு பதிலடி கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.)