சென்னையில் கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிதீர்த்த மழையால் சாலையில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில மணி நேரமாக இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, சேத்துப்பட்டு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் பெய்து வரும் திடீர் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.