சென்னையில் வாகன தணிக்கையில் நின்று கொண்டிருந்த உதவி ஆய்வாளரை இரும்பு ராடால் தாக்கி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையர்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சங்கர்(49). இவர் நேற்றிரவு அயனாவரம் காவல் நிலையம் முன்பு கே.எச் சாலையில் காவலர்களுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது இன்று அதிகாலை 4 மணியளவில் ஐசி.எப்பில் இருந்து கே.எச் சாலையை நோக்கி இருவாகனத்தில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் வேகமாக வந்துள்ளனர்.
வாகன தணிக்கையில் நின்றிருந்த உதவி ஆய்வாளர் சங்கர் அவர்களை வழிமறித்த போது, அவர்கள் கையில் வைத்திருந்த கவ்பார் இரும்பு ராடால் உதவி ஆய்வாளரை தலையில் தாக்கி விட்டு நிற்காமல் தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் காயமடைந்த உதவி ஆய்வாளர் நிலைதடுமாறி கீழே விழுந்த போது அருகிலிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர் சங்கர் அயனாவரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தப்பிச்சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.
இவர்கள் கவ்பார் இரும்பு ராடு மூலமாக கடையை உடைத்து கொள்ளையடிக்கும் நபர்களா அல்லது வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு செல்கிறார்களா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.