தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று 25-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போடும் பணி கடந்த ஒரு வருடமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டன. முதலில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது சனிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இதுவரை 24 மெகா முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 25-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சனிக்கிழமை தோறும் நடத்தப்படும் முகாம்கள் மூலம் இதுவரை தடுப்பூசி போடாமல் இருப்பவர்களுக்கு செலுத்தப்படுகிறது.
இதுவரையில் 9 கோடியே 91 லட்சத்து 7 ஆயிரத்து 546 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு 2-வது தவணை தடுப்பூசி போடாமல் ஒரு கோடியே 34 லட்சத்து 32 ஆயிரத்து 862 பேர் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் மருத்துவர் செல்வ விநாயகம் கூறியபோது 2-வது தவணை தடுப்பூசி போடாமல் இருப்பவர்களை மையமாகக் கொண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. கொரோனா தொற்று பரவல் தற்போது தீவிரமாக இல்லை என்றாலும் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் தடுப்பூசி போட முன்வர வேண்டும்.
சென்னையில் மட்டும் 10 லட்சத்து 60 ஆயிரத்து 411 பேர் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். கோவையில் 7 லட்சத்து 86 ஆயிரத்து 893 பேரும், தஞ்சாவூரில் 6 லட்சத்து 65 ஆயிரத்து 119 பேரும், சேலத்தில் 5 லட்சத்து 77 ஆயிரத்து 569 பேரும், மதுரையில் 5 லட்சத்து 62 ஆயிரத்து 989 பேரும் தடுப்பூசி போடாமல் உள்ளனர்.
தடுப்பூசி போடாமல் இருந்து வரும் மக்கள் மெகா சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் முகாம்கள் நடக்கின்றன.
இந்த முகாம்களில் எந்தெந்த வயது பிரிவினர் தடுப்பூசி போட விரும்பினாலும் போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி போடுவதை தவிர்க்காமல் தகுதி உள்ள அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும். அது தான் முழுமையான பாதுகாப்பை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.