குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக தங்கள் வாழ்க்கையையே இழந்துள்ள நம் சகோதரர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்பதே மனித மாண்பு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உருக்கம் தெரிவித்துள்ளார்.
குவைத் நாட்டின் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் (ஜூன் 12) புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 49 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 2 தமிழர்கள், கேரளாவைச் சேர்ந்த நால்வர் உள்பட 43 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை தாயகம் கொண்டு வருவதற்காக, இந்திய விமானப்படைக்கு சொந்தமான C-130J சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் குவைத் விரைந்தது.
இதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் கொச்சிக்கு 7 தமிழர்கள் உட்பட 31 பேரின் உடல்கள் இன்று எடுத்து வரப்பட்டன. இதில் கேரளாவைச் சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரது உடலும் கொண்டு வரப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ”தமிழிசை வீட்டிற்கு சென்ற அண்ணாமலை..” இதை மறந்துட்டிங்களே! – பாஜகவில் வீசும் புயல்
இந்த நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக தங்கள் வாழ்க்கையையே இழந்துள்ள நம் சகோதரர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்பதே மனித மாண்பு என்று ஜெயக்குமார் உருக்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜெயக்குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,” குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உயிரிழப்பு வேதனை அளிக்கிறது.
குடும்பத்திற்காக தங்கள் வாழ்க்கையையே இழந்துள்ள நம் சகோதரர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்பதே மனித மாண்பு!
இதில் எனது சொந்த ஊரான இராயபுரத்தில் சிவசங்கர் என்பவரும் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்தேன்!
தந்தையை இழந்து வாழ்வாதாரமின்றி இருக்கும் அவரது குடும்பத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ள அவரது மகளுக்கு தகுதிக்கேற்ற அரசுப்பணியை இந்த அரசு வழங்க வேண்டும்.
தற்போது பள்ளி பயின்று வரும் அவரது மகனுக்கு உயர்கல்வியில் எனது சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கி எதிர்காலத்திற்கு துணை நிற்பதாக உறுதியளித்துள்ளேன்.கொச்சி விமான நிலையத்தில் இருந்து வாகனங்கள் மூலம் உடல்கள் தமிழ்நாடு கொண்டு வரப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கொச்சியில் இருந்து தமிழ்நாட்டின் அந்தந்த பகுதிகளை சேர்ந்த விமான நிலையங்களுக்கு விமானம் மூலம் உடல்களை அரசு கொண்டு வந்து அருகிலுள்ள பகுதிகளுக்கு அனுப்பியிருக்க வேண்டும்.
மேலும் அரசு சார்பில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5-லட்சம் அறிவித்துள்ள நிலையில் அதனை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.