வருகிற 26ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, அண்ணாமலையார் மலை ஏறும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பின்வரும் நிபந்தனைகளை தவறாது கடைபிடித்து அருள்மிகு அண்ணாமலையார் மலை மீது ஏறுவதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
“திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளான (26.11.2023) அன்று காலை 05.00 மணிக்கு திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும்.
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 60 வயது உள்ளவர்கள் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
மலை ஏற அனுமதி கோரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அரசு அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகல் மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவ அலுவலரிடம் பெட்ரா உடல் தகுதி சான்று ஆகியவற்றறை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.
பக்தர்கள் பேகோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது.
26.11.2023 அன்று பிற்பகல் 02.00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப் படுவார்கள்.
மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும், காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும் போது திரும்ப கொண்டு வர வேண்டும்.
மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதியில்லை.
மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும். வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது” போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.