5வது மாடியில் இருந்து எஸ்கலேட்டர் வழியாக இறங்க முயன்ற போது எஸ்கலேட்டர் அருகில் இருந்த இடைவெளியில் சிறுவன் தவறி கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை எஸ்.எஸ்.காலனி அருகேயுள்ள வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனது மனைவி மற்றும் 7வயது மகன் நித்தீஸ் தீனா ஆகியோருடன் மதுரை அழகப்பன் நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஜவுளிக்கடையில் இன்று காலை தீபாவளி பண்டிகைக்காக துணி எடுக்கச் சென்றுள்ளனர்.
துணிகளை வாங்கிவிட்டு 5வது மாடியில் இருந்து எஸ்கலேட்டர் வழியாக இறங்க முயன்ற போது எஸ்கலேட்டர் அருகில் இருந்த இடைவெளியில் சிறுவன் தவறி கீழே விழுந்துள்ளான்.
அடுத்தடுத்து மாடிகளில் உள்ள கல்தூண்களில் சிறுவனின் தலை இடித்ததில் தலை உடைந்து அதிகளவிற்கு ரத்தம் வெளியேறி மயக்கமடைந்த சிறுவனை, உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
கடையில் இருந்த எஸ்கலேட்டர் அருகில் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி தடுப்புகள் உரிய முறையில் இல்லாத காரணத்தால் தான் குழந்தை தவறி விழுந்து படுகாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விபத்து ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிறுவன் உயிருக்கு போராடிவரும் நிலையில், கடை நிர்வாகமோ எந்தவித பதற்றமும் இன்றி தொடர்ந்து பொதுமக்களை வியாபாரத்திற்கு அனுமதித்து வருவதாகவும், இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் உரிய வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.