விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் ‘விஜய் பயிலகம்’ தொடங்கப்பட உள்ளது.
இன்று ஜூலை (15.07.23) பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ‘விஜய் பயிலகம்’ தொடங்கப்படும் என விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 234 சட்டசபை தொகுதிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை சென்னைக்கு அழைத்து கல்வி உதவி விழாவுக்கு விஜய் ஏற்பாடு செய்து அதில் பங்கேற்றிருந்தார்.
அதையடுத்து, வரும் 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தளுக்காக நடிகர் விஜய் அரசியலுக்குத் தயாராகி வருவதாகவும், அதனால் வெங்கட் பிரபு படத்தில் நடித்த பின் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருப்பதாகவும் செய்திகள் பரவின.
இந்நிலையில், சமீபத்தில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து நடிகர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
மேலும், தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘லியோ’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இன்று மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஜய் பாட சாலை நிகழ்ச்சியை துவக்கி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 234 தொகுதிகளிலும் இன்று இரவு பாட சாலை திட்டத்தை தொடங்க விஜய் முடிவு செய்துள்ளதாகவும், அந்த நிகழ்ச்சிக்கு படிப்பகம், பயிலகம், அறிவொளியகம், கல்வியகம் ஆகிய பெயர்களில் ஒன்றை வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘தளபதி’ அவர்களின் சொல்லுக்கிணங்க வரும் ஜூலை 15ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திருவுருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தளபதி ‘விஜய் பயிலகம்’ ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.