நடிகர் ரஜினிகாந்தை சசிகலா சந்தித்தது குறித்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்திற்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டதில், மூளைக்குச் செல்லும் கழுத்துப் பகுதியில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, அடைப்பைச் சரிசெய்தனர். அவருக்கு ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வந்தனர்.
சிகிச்சைக்குப் பின்னர், ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அக்டோபர் 31-ம் தேதி ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து சசிகலா நலம் விசாரித்துள்ளார்.
மேலும், தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு சசிகலா வாழ்த்து தெரிவித்தார். ரஜினிகாந்த் – சசிகலா இடையே ஒருமணி நேரத்திற்கும் மேல் இந்த சந்திப்பு நீடித்துள்ளது. இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உடன் இருந்துள்ளார்.