வாட்ஸ் அப்பில் (whatsapp) ‘வாய்ஸ் நோட்ஸ்களை’ ஸ்டேடஸ் ஆக வைக்கும் புதிய அப்டேட்டிற்கு மெட்டா நிறுவனம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாட்ஸ் அப் (whatsapp) என்பது நுண்ணறி அலைபேசிகளில் இயங்கும் உடைமை உரிமையுள்ள ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும். வாட்ஸ் அப் என்பது தமிழில் “பகிரி” அல்லது புலனம் அல்லது கட்செவி அஞ்சல் ” என்றும் சொல்லப்படுகிறது.
வாட்ஸ் அப் 2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன், ஜேன் கோம் ஆகியோரால் நிறுவப்பட்டது. வாட்ஸ் அப் ஆன்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் மொபைல், நோக்கியாவின் சிம்பியன், பிளாக்பெரி போன்ற பல்வேறு அலைபேசி இயங்கு தளங்களிலும் இயங்கும்.
மேலும், உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.
இந்நிலையில், வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளதால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்காண மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், முன்னதாக “கம்யூனிட்டிஸ்” என்ற புதிய வசதியை வாட்ஸ் அப்பில் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
அதாவது, வாட்ஸ் அப்பில் குரூப் உரையாடல்களை தொடர, பயனர்கள் பல குரூப்களை “கம்யூனிட்டிஸ்”ன் கீழ் இணைக்க முடியும்.
இவை அனைத்தும், “என்ட் டு என்ட் என்க்ரிப்ஷன்” மூலம் பாதுகாக்கப்படும் என மார்க் ஜுக்கர்பெர்க் கூறி இருந்தார்.
முன்னதாக, வாட்ஸ் அப் பயனர்கள் படங்களையும் வீடியோக்களையும் மட்டுமே ஸ்டேட்டஸ்களாகப் பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில், வாட்ஸ் அப்பில் நமது ‘வாய்ஸ் நோட்ஸ்களை’ ஸ்டேடஸ் ஆக வைக்கும் புதிய அப்டேட்டிற்கு மெட்டா நிறுவனம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், வீடியோ ஸ்டேட்டஸ்களை போன்றே வாய்ஸ் நோட்ஸ்களையும் அதிகபட்சமாக 30 நொடிகள் வரை வைக்கும் வசதி அறிமுகப்படுத்த இருப்பதாக ‘வாபீட்டாஇன்போ” தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த வசதி விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி இருப்பினும் மெட்டா நிறுவனம் இது குறித்து அதிகாரபூர்வ தகவலை வெளியிடவில்லை.