ஜப்பானில் 2011-ல் ஏற்பட்ட சுனாமியில் காணாமல்போன தன்னுடைய காதல் மனைவியின் உடலைத் தேடி ஒவ்வொரு வாரமும் டைவிங் செய்து வருகிறார் காதல் கணவர்.
ஜப்பானில் 2011-ல் ஏற்பட்ட சுனாமி, உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கோர நிகழ்வு ஏற்பட்டு 11 ஆண்டுகள் கடந்துவிட்டன.
இது ஜப்பானில் அதிகாரபூர்வமாக பதிவுசெய்யப்பட்ட மிக சக்திவாய்ந்த பேரழிவு. இந்தப் பேரழிவில் 19,759 பேர் இறந்ததாகவும், 2,500-க்கும் மேற்பட்டோர் காணாமல்போனதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், ஜப்பானில் யசுவோ தகமாட்சு-யூகோ தகமாட்சு என்ற தம்பதியர் வசித்து வந்தனர். சுனாமியின்போது தம்பதி வசித்துவந்த ஒனாகவா பகுதி மிகக் கடுமையாக தாக்கப்பட்டது.
அந்த கோர தாக்குதலில் யூகோ காணமல் போனதாகக் கூறப்படுகிறது.அந்த பேரழிவில், உயிர்பிழைத்த அவரது கணவர் யசுவோ, சுமார் 11 வருடங்களாகத் தன் மனைவியைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்.
தற்போது 65 வயதாகும் யசுவோ `என்னுடைய மனைவியின் உடலை எப்படியாவது கண்டுபிடிப்பேன்’ என நம்பிக்கையுடன் இரண்டு ஆண்டுகள் நிலத்திலும், 2013-ம் ஆண்டிலிருந்தது கடல் பகுதியிலும் தேடிக்கொண்டிருக்கிறார்.
தற்போது ஒவ்வொரு வாரமும் தன் மனைவியின் உடலைத் தேடி அவர் கடலில் டைவிங் செய்து தேடி வருவது காண்போரை கலங்கச் செய்கிறது.
இதுபற்றி யசுவோ கூறுகையில், பேரழிவுக்குப் பிறகு அவள் செல்போன், பிற உடைமைகள் மீட்கப்பட்டன. ஆனால், அவளுடைய உடல் கடைசி வரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. நான் சாகும்வரை அவளைத் தேடிக்கொண்டே இருப்பேன்” என்று கூறினார்.
அவரது விடாமுயற்சிக்கு நிச்சயம் ஒரு நாள் விடை கிடைக்கும் என்று இணையவாசிகளும், நண்பர்களும் அவருக்கு ஆறுதல் வார்த்தை கூறி வருகின்றனர்.