இரவில் சினிமாவிற்கு சென்று திரும்பிய பெண்ணை வீட்டிற்கு பாதுகாப்பாக அழைத்து செல்வதாக கூறி காவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் என்பவர் பைப் கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் பணிபுரியும் 4 ஆண்கள் மற்றும் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கடந்த சனிக்கிழமை இரவு செல்லூர் பகுதியிலுள்ள திரையரங்கில் திரைப்படம் பார்க்கச் சென்றுள்ளார்.
திரைப்படம் முடிந்து அந்தப்பெண் தனது முதலாளி மகேஷ்குமாருடன் வீட்டிற்கு செல்லும் போது நேதாஜி சாலை அருகே இரவு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் இருவர் படம் பார்த்துவிட்டு வந்த இருவரையும் நிறுத்தியுள்ளனர்.
விசாரணை செய்த பின் மகேஷ்குமாரை தனியாக வீட்டிற்கு செல்லுமாறு கூறியதோடு, சந்தேகமாக இருப்பதால் அவருடன் வந்த இளம்பெண்ணை தானே வீட்டிற்கு பாதுகாப்பாக அழைத்து வருவதாக கூறி மிரட்டி அனுப்பியுள்ளார்.
மேலும் மகேஷ்குமாரின் செல்போன் மற்றும் 11 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவலர்கள் அவருடைய ஏடிஎம் பின் நம்பரையும் கேட்டு வாங்கியதோடு ஞாயிற்றுக்கிழமை வந்து செல்போனை வாங்குமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து இளம்பெண்ணை தனது வாகனத்தில் அழைத்து சென்ற காவலர், விபச்சார வழக்கு பதிவு செய்துவிடுவேன் என மிரட்டி வணிக வளாகம் ஒன்றில் வைத்து அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
![woman-raped-by-police-constable-after-in-madurai](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2021/11/veg.jpg?resize=794%2C542&ssl=1)
மறுநாள் பெண்ணின் வீட்டிற்கு சென்ற மகேஷ்குமார் பெண்ணிடம் கேட்ட போது சனிக்கிழமை இரவில் காவலர் முருகன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததை கூறியுள்ளார் அந்த பெண்.
இதனையடுத்து முருகனை கைது செய்ய கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் கடை உரிமையாளரான மகேஷ்குமார் திலகர்திடல் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகார் மனுவை தொடர்ந்து காவலர் முருகன் மீது மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இரவில் பொதுமக்களை பாதுகாப்பதாக கூறி வாகன சோதனையில் ஈடுபட்ட காவலரே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து பணத்தையும் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.