ஒடிசாவில் 70 வயதான மூதாட்டி தனது மகனின் தோட்டத்தில் இருந்து காலிபிளவரை பறித்ததால் ஆத்திரமடைந்த மகன் மூதாட்டியை மின்கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒடிசா மாநிலம் கியாஜ்ஹர் மாவட்டம் சரசபசி கிராமத்தை சேர்ந்தவர் 70 வயதுடைய மூதாட்டி சாரதா. கணவரை இழந்து தனிமையில் இருந்து வரும் சாரதாவுக்கு கருணா, சஸ்துருகன் என 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவருக்கும் திருமணமாகி விட்ட நிலையில், சாரதா தனது மூத்த மகன் கருணாவின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், மூத்த மகன் கருணா நோய் காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார்.
அதையடுத்து, அதேகிராமத்தில் சாரதாவின் இளைய மகன் சஸ்துருகன் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். சஸ்துருகனுக்கு அந்த கிராமத்தில் தோட்டம் இருந்துள்ளது. அந்த தோட்டத்தில் காலிபிளவர் பயிரிட்டுள்ளார்.
இந்நிலையில், சாரதா நேற்று தனது இளைய மகன் சஸ்துருகனின் தோட்டத்தில் இருந்து சமைப்பதற்காக காலிபிளவர் பறித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சஸ்துருகன் தனது தாயார் சாரதாவை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், ஆத்திரமடங்காத அவர் தனது தாயார் சாரதாவை வீட்டிற்கு அருகே இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து மீண்டும் கடுமையாக தாக்கியுள்ளார்.
மேலும், மாமியாரை காப்பாற்ற சென்ற அவருடைய மனைவியையும் சஸ்துருகன் தாக்கியுள்ளார். யாரேனும் தடுத்தால் அவர்களையும் தாக்குவேன் என்று ஊர் மக்களையும் மிரட்டியுள்ளார். ஆனாலும், அப்பகுதி மக்கள் சஸ்துருகனிடமிருந்து மூதாட்டி மற்றும் அவரது மனைவியை மீட்டனர்.
மகன் தாக்கியதில் படுகாயமடைந்த சாரதா அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பெற்ற தாயை தோட்டத்தில் இருந்த காலிபிளவர் பறித்ததற்காக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.