கடலுக்கடியில் சுமார் 375 ஆண்டுகள் மறைந்திருந்த உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்த கண்டுபிடிப்பு உலக நாடுகளிடையே முக்கிய செய்தியாக பரவி வருகிறது. இதனை கடல் தளத்திலிருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். டெக்டோனிக்ஸ் இதழில் இந்த ஆராய்ச்சி குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, விஞ்ஞானிகளால் ஜீலந்தியா (Zealandia) என்று அழைக்கப்படும் இந்த புதிய கண்டத்தை நியூசிலாந்துக்கு அருகே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய கண்டத்தின் 94 சதவீத பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளது.
இந்த கண்டம் ஒட்டுமொத்தமாக 49 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகவும், இதில் நியூசிலாந்தை போல சில தீவுகள் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த புதிய ஜீலந்தியா கண்டம் மடகாஸ்கர் தீவை காட்டிலும் 6 மடங்கு பெரியது என்றும், உலகில் இதனுடன் சேர்த்து மொத்தம் 8 கண்டங்கள் இருப்பதாகவும் புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், தற்போது உலகில் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா ஆகிய 7 கண்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்த புதிய கண்டத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.