தேன்கனிக்கோட்டையில், ஆசிரியர் ஒருவரின் வீட்டு காம்பவுண்டு சுவரில் 23 பாம்புகள் (snakes) இருந்த நிலையில் அதனை பிடிக்கச் சென்ற பாம்பு பிடி வீரரை நல்ல பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேன்கனிக்கோட்டை மேல்கோட்டை விஜய நகர் பகுதியில் கோபி என்ற நபர் வசித்து வருகிறார். இவர், தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஆசிரியர் வீட்டின் வெளியில் நின்று கொண்டிருந்த போது வீட்டின் காம்பவுண்டு சுவரில் உள்ள துளையில் நல்ல பாம்பு ஒன்று புகுந்தததைப் பார்த்து ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார். அதனையடுத்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில், வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரர்களான வாட்ச் முபாரக், புல்லட் முபாரக், சையத் முஜாமில் ஆகியோருடன் ஆசிரியர் கோபியின் வீட்டிற்குச் சென்று பாம்பை பிடிக்க முயன்றனர்.
அப்போது பாம்பு புகுந்த அந்த துளையில், மேலும் 22 பாம்பு குட்டிகள் (snakes) இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், வனத்துறையினர் துளையினுள் இருந்த நல்ல பாம்பு மற்றும் அதன் குட்டிகளையும் பிடித்தனர்.
அப்போது ஒரு பாம்பு குட்டி வாட்ச் முபாரக் என்பவரை கடித்ததில் அவர் மயக்கமடைந்தார். அதையடுத்து, வனத்துறையினர் அவரை உடனடியாக மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிடிபட்ட பாம்பு மற்றும் குட்டிகளை வனத்துறையினர் மரகட்டா வனப்பகுதியில் விட்டனர்.
ஒரே இடத்தில் 23 பாம்புகள் பிடிபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.