விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலைகள் செயல்பட்டு வரும் நிலையில் அங்குள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று எதிர்பாராத வகையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் என எக்ஸ் தளத்தில் இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிப்பதாவது..
“விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள, செங்கமலப்பட்டியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்டிருக்கும் வெடிவிபத்தில் 5 பெண்கள் உள்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த கவலையுறச் செய்கிறது. மேலும் சிலர் காயமடைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் பூரண குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன்.

வெடி விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
மேலும், இதுபோன்று பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவது என்பது தொடர் கதையாகி வருகிறது. இந்த விபத்துகளைத் தடுக்க, இந்த ‘போலி திராவிட மாடல்’ அரசாங்கமானது, இம்மியளவும் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரியவில்லை.
சிவகாசி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பாமர மக்கள், பட்டாசு தயாரிக்கும் தொழிலை மூலதனமாக கொண்டு பணியாற்றி வரும் சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் விதமான நடவடிக்கைகளை இனிமேலாவது இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி..! என பதிவிட்டுள்ளார்.