வேலூரில், சாலை வசதி இல்லாததால் குழந்தையின் சடலத்தை 10 கிலோ மீட்டர் தூரம் பெற்றோர் கையால் தூக்கிச் சென்ற சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் உள்ள அத்திமரத்து கொல்லை என்ற கிராமத்தில் கூலித் தொழிலாளியான விஜி மற்றும் அவரது மனைவி பிரியா ஆகிய தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற குழந்தை இருந்துள்ளார்.
இந்நிலையில், குழந்தை தனுஷ்கா கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்தபோது அவரை நல்ல பாம்பு கடித்துள்ளது.
அதனைப் பார்த்த பெற்றோர் குழந்தையை உடனடியாக அணைக்கட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சாலை வசதி இல்லாத காரணத்தால் குழந்தையை மருத்துவமனைக்கு செல்ல நீண்ட நேரமானது. இதனால், குழந்தை பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அணைக்கட்டு காவல் துறையினர், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், பிரேத பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றபோதும் சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து பாதி வழியிலேயே இறக்கி விடப்பட்டனர்.
இந்நிலையில், சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தே பெற்றோர் குழந்தையின் சடலத்தை தூக்கி சென்ற்றுள்ளனர்.
இதனையடுத்து, அந்த கிராமத்தில் சாலை வசதி இருந்திருந்தால், குழந்தையை காப்பாற்றி இருக்க முடியும் என்று உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்த நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்த பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.