தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளமான மனோராவில் படகு சவாரியை தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் இருக்கும் ஊர் மல்லிப்பட்டிணம். இந்த ஊருக்கு அருகே பிரபல சுற்றுலா தளமான மனோரா உள்ளது. 1814ல் கடல் போரில் நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதைப் பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட தஞ்சாவூர் மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவினார்.
அந்நினைவுச்சின்னத்தை மனோரா என்று அழைக்கின்றனர். இது எட்டு மாடி, அறுகோண வடிவ கோபுர அமைப்பைக் கொண்டுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 23 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கோட்டை மினாரெட் என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து மனோரா என்ற பெயரைப் பெற்றது. இந்த மனோரா கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி காரணமாக இந்த மனோரா சிதிலமடைந்தது.
அதற்கு பிறகு பெரிதாக மனோரா பராமரிக்கபடாமல் இருந்தது. இந்த நிலையில், மனோராவை புரனமைக்கப்பட்டு, சுற்றுலாத்தளமாக கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி மக்கள் விடுத்து வந்தனர்.
இதனையடுத்து, ஊரக உள்ளாட்சி வளர்ச்சி திட்டத்தின் கீழ் சரபேந்திர்ராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணம் மனோராவில் ரூ.160.84 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா, படகு குழாம், பேபர் பிளாக் நடைபாதை, உணவகம் மற்றும் மனோரா பயிற்சி மையங்களை தொடங்கி வைத்தார். இந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள படகு சவாரியை பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்து படகு சவாரி செய்தார்.
இந்நிகழ்வில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்,பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை,திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன்,சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் முத்துமாணிக்கம்,சரபேந்திரராஜன் பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா, அரசு அதிகாரிகள், மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.