சென்னை பறக்கும் ரயில் வழித்தடத்தை தமிழக அரசிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, “குப்பை இல்லாத இந்தியா” என்ற நிகழ்ச்சி தெற்கு ரயில்வே சார்பில் மாபெரும் தூய்மைப் பணி மற்றும் பிரச்சாரம் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் கலந்து கொண்டு தூய்மைப் பணி மற்றும் பிரச்சாரத்தை தொடங்கி வைத்த பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், சென்னை பறக்கும் ரயில் வழித்தடத்தை (எம்ஆர்டிஎஸ்) தமிழக அரசிடம்கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு தற்போது வணிகதிட்ட அறிக்கை தயாரித்து வருகிறது. எப்போது வேண்டும் என்று தமிழக அரசு கேட்கிறார்களோ அப்போது எம்.ஆர்.டி.எஸ் வழித்தடம் முழுவதுமாக அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வேயில் 360 ரயில் நிலையங்கள், 43 ரயில்வே குடியிருப்புகள், 47 ரயில் பராமரிப்பு மையம் மற்றும் பணிமனைகள், 30 மருத்துவ மையங்கள், ரயில் ஓட்டுநர் அறைகள் உட்பட 1,200 இடங்களில் தூய்மை பிரச்சாரம் நடைபெற்றது. 12,000 தன்னார்வலர்கள் இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.