முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே வாசன் வீட்டின் வாசலில் இறந்த ஆண் சடலம் ஒன்று கிடந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சராகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே.வாசன், தற்போது மாநிலங்களவை எம்.பியாக உள்ளார்.
ஜி.கே.வாசனுக்கு டெல்லியில் அசோகா சாலையில் உள்ள பட்டேல் சவுக் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அரசின் சார்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டின் வாசலில் நேற்று காலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார்.
இது குறித்த தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். பிறகு இறந்து கிடந்தவரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
எம்.பியாக இருக்கும் ஜி.கே.வாசன் வீட்டின் முன்பு இறந்தவரின் சடலம் கிடந்ததால் டெல்லி போலீசார் பரபரப்படைந்துள்ளனர். இறந்தவர் 60 வயது மதிக்கத்தக்க ஆண் என தெரியவந்தது.
மேலும் அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி அங்கு இறந்து கிடந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.