திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் 2வது மலைப் பாதையில் திடீரென ஏற்பட்ட மண் சரிவில் இருந்து அவ்வழியே செல்லும் வாகனங்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்வதற்காக, திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் 2வது மலை பாதை, திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரவேண்டிய முதல் மலைப்பாதை என இரண்டு மலைப்பாதைகள் உள்ளன.
இதில் கோவிலுக்கு செல்லும் 2வது மலைப் பாதையில் வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டு இருந்த நிலையில், முக்காளமிட்டு என்ற இடத்தில் இணைப்பு சாலை அருகே கனமழை காரணமாக திடீரென பாறை சரிந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியே சென்று கொண்டு இருந்த அரசு பேருந்து ஓட்டுநர் சத்தம் கேட்டு உடனடியாக பேருந்தை நிறுத்தி பின்னால் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பாறை விழுந்ததில் 3 வளைவுகளில் உள்ள சாலைகள் பலத்த சேதம் அடைந்ததால் சாலை சேதத்தை சீர் செய்வதற்கு 2வது மலைப் பாதையை தேவஸ்தானம் அதிகாரிகள் மூடியுள்ளனர். மேலும் பாறைகள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணியில் தேவஸ்தான பொறியாளர்கள், வனத்துறை அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இதனால் 2வது மலைப்பாதையில் சுமார் 5 கிமீ- க்கு வாகனங்கள் ஆங்காங்கே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து காத்திருந்த வாகனங்களை இணைப்பு சாலை மூலம் முதலாவது பாதை வழியே திருமலைக்கு செல்ல எடுக்கப்பட்டுள்ளது