உலகின் முன்னணி பணக்காரரான தொழிலதிபர் எலான் மஸ்க் (Elon Musk) சமூக வலைத்தளமான ட்விட்டரை முழுமையாக கையகப்படுத்தியுள்ளார்.
உலகின் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை முழுமையாக வாங்குவதாக அறிவித்திருந்தார்.
ட்விட்டரின் அனைத்து பங்குகளையும் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாகவும் அவர் அறிவித்தார். இந்திய ரூபாயின் மதிப்பின் படி இந்த தொகை மூன்று லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாகும்.
மேலும், ஒப்பந்தம் போட்ட சில வாரங்களில் சில காரணங்களால் அதில் இருந்து வெளியேறுவதாக கூறினார்.
ஆனால், மஸ்க், தற்போது தன்முடிவை மாற்றிக்கொண்டு ட்விட்டரை முழுமையாக வாங்கி கையகப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், தற்போது எலான் மஸ்க் கைக்கு ட்விட்டர் நிறுவனம் சென்ற நிலையில், அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி(CEO), தலைமை நிதி அதிகாரி (CFO) தலைமை சட்ட அதிகாரி(CLO) உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து, ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதை குறிப்பிடும் வகையில், நேற்று எலான் மஸ்க் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டரின் தலைமையகத்திற்கு கை கழுவப் பயன்படுத்தும் தொட்டியுடன் சென்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், தலைமை அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தி விட்டு, ஒப்பந்தத்தை நிறைவேற்றும் விதமாக ட்விட்டரின் முழு கட்டுப்பாட்டை பெற்றுள்ளார்.
தொடர்ந்து, தனது ட்விட்டர் கணக்கின் பயோவையும் ‘Chief Twit’ என மாற்றியுள்ளார்.
மேலும், பல அதிரடி மாற்றங்களை ட்விட்டரில் எலான் மஸ்க் (Elon Musk) கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.