குஜராத்தில் திருமணத்திற்கு சென்ற மணமகனின் நண்பர்கள் எலுமிச்சை பழத்தை அன்பளிப்பாக அளித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் வித்தியாசமான முறையில் அன்பளிப்பு கொடுப்பதற்கான காரணம் என்னவென்பதையும் கூறி அசரவைத்துள்ளனர்.
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள மணமகன் ஒருவருக்கு வழக்கத்திற்கு மாறான ஒரு அசாதாரண திருமணப் பரிசு கிடைத்தது. மணமகனுக்கு அவரது நண்பர்கள் ஒரு பெட்டி நிறைய எலுமிச்சம் பழங்களை பரிசாக அளித்துள்ளனர். தனது திருமணத்திற்காக மணமகனிடம் எலுமிச்சம் பழங்களை நண்பர்கள் பரிசளிக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
மணமகனின் நண்பர் தினேஷ், தனது அசாதாரண திருமண பரிசு குறித்து “இந்த நேரத்தில் மாநிலம் மற்றும் நாடு முழுவதும் எலுமிச்சையின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. இந்த கோடைக்கால சீசனில் எலுமிச்சை மிகவும் தேவைப்படுகிறது. அதனால்தான் நான் எலுமிச்சைப் பழத்தை பரிசளித்துள்ளேன்” என்று கூறியுள்ளார். மணமகனின் நண்பர்கள் மணமகனுக்கு மதிப்புமிக்க ஒன்றை பரிசாக கொடுக்க நினைத்து எலுமிச்சம் பழத்தை கொடுத்துள்ளனர்.
சமீப காலமாக வெப்பநிலை அதிகரித்ததால், எலுமிச்சை தேவை அதிகரித்தது. இந்த வெப்பமான காலநிலையில் மக்கள் எலுமிச்சை பானங்களை குடிக்க விரும்புகிறார்கள். ஆனால் அதிக விலைகள் இந்த பானங்களை அனுபவிக்க கடினமாக உள்ளது.
குஜராத்தில் எலுமிச்சம்பழம் ஒரு கிலோவுக்கு 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் எலுமிச்சையின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வுக்கு முன், எலுமிச்சை பழம் கிலோ, 50 முதல், 69 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த அசாதாரண விலை உயர்வு சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.