ஊரகப்பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய ஊரக பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதற்கான அதிகாரபூர்வ அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
மக்களின் சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும், பலப்படுத்தவும், மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர்களது பங்களிப்புடன் செயல்படுத்தி, பொது சொத்துக்களை உருவாக்கிப் பராமரிக்கும் நோக்கத்தில், நமக்கு நாமே திட்டம் கடந்த 2011ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. அதன்பிறகு அதிமுக ஆட்சியில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படாத நிலையில், தற்போது மீண்டும் செயல்படுத்துவதற்கான அரசாணையை தி.மு.க அரசு வெளியிட்டிருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் 2021 – 22ம் ஆண்டு நிதியாண்டில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஊரக உள்ளாட்சித்துறையானது அரசாணை வெளியிட்டிருக்கிறது.
மேலும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எந்தெந்த பணிகள் செயல்படுத்த வேண்டும், அவை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக ஒரு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழக அரசால் வெளியிடப்பட்டிருக்கிறது.
இத்திட்டத்தின் மூலம் வளர்ச்சிப் பணிகளை திட்டமிடுதல் , வள ஆதாரங்களை திரட்டுதல், பணிகளை மேற்கொள்ளுதல், மேற்பார்வை செய்தல் ஆகிய மக்கள் பணிகள் இருக்கும். மொத்தமுள்ள 100 கோடி ரூபாயில், 50 கோடியானது முதற்கட்டமாக இத்திட்டங்கள் செயல்பாட்டிற்கு வருவதற்கான நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.