வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, ஈரோடு, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
நாளை கோவை, தேனி, திண்டுக்கல், குமரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்யக்கூடும்.

மேலும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தென் கிழக்கு அரபிக் கடல், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ள வானிலை மையம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.