வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பேரணாம்பட்டு பகுதிகளில் பெய்த மழையால் அஜிஜியா வீதி, குல்ஷார் தெருக்களில் வெள்ளம் புகுந்தது.
இந்நிலையில், அஜிஜியா தெரு பகுதியில் நேற்று இரவு முதல் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் அனுஷாபேகம் என்பவரது வீட்டின் மாடியில் அக்கம் பக்கத்தினர் என குழந்தைகள் உட்பட 15 பேர் தங்கியுள்ளனர்.
கனமழை காரணமாக அந்த வீடு அதிகாலை 6 மணிக்கு திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்துள்ளது. வீடு இடிந்து விழுந்த தரைமட்டமானதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 6 பேரை மீட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
![house-collapse-due-to-heavy-rain-9-death](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2021/11/201805211456531135_Six-killed-around-3000-families-displaced-in-Tripura-floods_SECVPF_21052018_KLL_CMY.jpg?resize=650%2C394&ssl=1)
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வேலூர் ஆட்சியர் குமரவேல் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து ஆய்வு செய்ததோடு, அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர்.
இதனிடையே, இந்த கோர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சமும் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளார்.