தெலுங்கு தெரியாத காரணத்தால், உடல் நலக்குறைவால் உயிரிழந்த( wife-dead) மனைவியின் சடலத்தை கணவர் தோளில் சுமந்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் கோராபுத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சமுலு – ஈது குரு தம்பதி. கடந்த சில நாட்களாக மனைவி ஈது குரு நோய்வாய்ப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இவர்கள் இருவரும் ஒரு வேலையாக சென்றுள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் விசாகபட்டினத்தில் ஈது குருவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே அங்கு உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து ஈது குருவை மேல் சிகிச்சைக்காக ஆட்டோவில் சமுலு மற்றும் ஈது குரு விஜயநகரத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் ராமாவரம் பாலத்திற்கு அருகில் ஆட்டோ சென்ற போது, ஈது குருவுக்கு உடல் நிலை மிகவும் மோசமாகி உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது.
மேலும் திடீரென ஈது குரு உயிரிழந்ததால் பதறிய ஆட்டோ ஓட்டுநர் இருவரையும் அங்கேயே இறக்கிவிட்டுத் தப்பியுள்ளார்.இறந்த மனைவியை ஆம்புலன்சில் கொண்டு செல்ல முயன்ற சமுலு, அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார்.
ஆனால், தெலுங்கு தெரியாத காரணத்தால் அங்கிருந்த மக்களுடன் பேச முடியாமல் திணறிய சமுலு, செய்வதறியாது திகைதுள்ளார்.
இதனை தொடர்ந்து மனைவியின் சடலத்தைத் தோளில் சுமந்து கொண்டு சமுலு நெடுஞ்சாலையில் நடக்கத் துவங்கிய நிலையில் அக்கம்பக்கத்து மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சமுலுவை மறித்து விசாரணை மேற்கொண்டனர்.
நடந்த விவரங்கள் அனைத்தையும் சமுலு கூறிய நிலையில், மருத்துவ சான்றுகளை சரிபார்த்த பிறகு உறுதி செய்த போலீசார் சமுலுவுக்கு ஆறுதல் கூறியதோடு உணவு வழங்கி, ஒடிசா செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்துக்கொடுத்தனர்.
மொழி தெரியாத காரணத்தால், உடல் நலக்குறைவால் உயிரிழந்த மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து கணவர் சுற்றிய சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.