Air India Flight Cancelled : கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரமனா பகுதியை சேர்ந்தவர் 40 வயதான நம்பி ராஜேஷ். இவரது மனைவி அம்ருதா.
ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் உள்ள இந்திய பள்ளியில் நம்பி ராஜேஷ் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி அம்ருதா தனது குழந்தைகளுடன் கேரளாவில் தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த சூழலில், கடந்த 7ம் தேதி மஸ்கட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ராஜேசுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் தனது மனைவி அம்ருதா மற்றும் குழந்தைகளை பார்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மறுபுறம், ராஜேசுக்கு மாரடைப்பு ஏற்பட்டது குறித்து கேரளாவில் உள்ள அம்ருதாவுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், தகவல் அறிந்து துடிதுடித்து போன அம்ருதா கணவனை பார்க்க வேண்டுமென கடந்த 8ம் தேதி கேரளாவில் இருந்து மஸ்கட் செல்ல ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் எடுத்துள்ளார்.
ஆனால், அன்றைய தினம் ஏர் இந்தியா விமான ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் பணிக்கு வராமல் விடுப்பு எடுத்தனர்.
இதனால் 80க்கும் மேற்பட்ட விமானகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கேரளாவில் இருந்து மஸ்கட் செல்லவிருந்த விமானமும் ரத்தானது.
இது குறித்து அறியாத அம்ருதா மஸ்கட் செல்ல விமான நிலையம் வந்த போது தான் விமானம் ரத்தானது தெரியவந்தது.
பின்னர், விமான நிறுவன ஊழியர்களிடம் அவர் முறையிட்டதை அடுத்து, மறுநாள் 9ம் தேதி மஸ்கட் செல்ல ஏர் இந்தியா நிறுவனம் அம்ருதாவுக்கு டிக்கெட் வழங்கியுள்ளது.
ஆனால், 9ஆம் தேதியும் விமான ஊழியர்கள் பணிக்கு வராததால் அம்ருதாவின் மஸ்கட் பயணம் மீண்டும் ரத்தானது Air India Flight Cancelled.
இதனிடையே, மஸ்கட்டில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேஷ் உடல் நிலை சற்று முன்னேற்றம் அடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவர் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார்.
பின்னர் அவர் ஞாயிற்றுக்கிழமை மனைவி அம்ருதாவிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது, மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
மனைவியிடம் பேசிவிட்டு உறங்கிய ராஜேசுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் படுக்கையிலேயே உயிரிழந்துள்ளார்.
ராஜேஷ் உயிரிழந்தது குறித்து அவரது மனைவி அம்ருதாவுக்கு நேற்று தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், கணவன் மரணமடைந்தது குறித்த செய்தி கேட்ட அம்ருதா கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவரை உயிருடன் ஒருமுறையாவது நேரில் பார்த்துவிடவேண்டும் என்ற அம்ருதாவின் எண்ணம் கடைசி வரை நிறைவேறாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.